மஹாபாரதம் பகுதி 70: கர்ணனின் திறமை ஏன் வீணானது?
நீங்கள் எப்பேற்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் நீங்கள் ஆணவத்தோடு இருந்தால் உங்கள் திறமைக்கு பலன் கிடைக்காது. திறமைக்கு துணையாக அருள் கிடைக்கும்போது, அது நீங்கள் உங்கள் அளவில் இருப்பதைவிட இன்னும் பெரிதாகிட உதவும். அப்படித்தான் வாழ்க்கை நடக்க வேண்டும்.

பங்கேற்பாளர்: சத்குரு, ஒரு மாபெரும் வீரனாக போற்றப்படும் கர்ணன், அர்ஜுனனை தோற்கடித்து கிருஷ்ணரை கொல்லக்கூடிய திறன் கொண்டவனாக கருதப்படுகிறான். ஆனால் மஹாபாரதம் முழுவதிலும் கர்ணன் எந்த ஒரு போரிலும் வெற்றிபெறவே இல்லை. கந்தர்வர்கள் அவனை கட்டிப் போட்டுவிடுகிறார்கள், விராட தேசத்துக்கு எதிரான போரிலும் கர்ணனை அர்ஜுனன் தோற்கடித்துவிடுகிறான். ஏன் அப்படி நடந்தது?
சத்குரு:Subscribe
பிறந்தது முதலே, அருளோ அதிர்ஷ்டமோ கர்ணனுடன் இல்லை. தன்னையும் ஒருவனாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற தனது கொடுமையான சுய ஏக்கத்தில், முழுமையாக பக்குவமடைவதற்கு முன்பாகவே ஏற்படுத்திக்கொண்ட தவறான சகவாசத்தில் இருந்து அவனால் விடுபடவே முடியவில்லை. ஒரு நிலையை அடைந்துவிட வேண்டும் என்பதில் மிகுந்த அவசரம் காட்டினான் கர்ணன். பதின் பருவத்தில் இருந்தபோது நீங்கள் தேர்ந்தெடுத்த சிலவற்றைப் போன்றது தான் இதுவும். இப்போது திரும்பிப் பார்த்தால், அந்த வயதில் நான் அப்படி செய்திருக்கக் கூடாது என்று சில தேர்வுகளை எண்ணி நீங்கள் வருந்தக்கூடும். நல்லவேளையாக உங்களில் பெரும்பாலானவர்கள் அதுபோன்ற விஷயங்களில் இருந்து வளர்ந்து வெளிவந்துவிட்டீர்கள்.
யாரோ ஒருவர் தனக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்பதற்காக கர்ணன் அதை அப்படியே பற்றிக்கொண்டான். ஏனென்றால், தன் நிலையை எண்ணி கர்ணன் பரிதவித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு கர்ணனால் அங்கிருந்து திரும்பவே முடியவில்லை. தனக்கு துணையாக அருள் இருக்கவேண்டும் என்று கர்ணன் தேர்வு செய்யவில்லை - தனக்கு துணையாக ஆணவத்தை தேர்ந்தெடுத்தான் கர்ணன். இந்த காரணத்தால்தான் கர்ணனின் திறமை முழுவதும் வீணானது. இதுதான் வாழ்க்கையின் உண்மையும்: நீங்கள் எப்பேற்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் நீங்கள் ஆணவத்தோடு இருந்தால் உங்கள் திறமைக்கு பலன் கிடைக்காது. திறமைக்கு துணையாக அருள் கிடைக்கும்போது, அது நீங்கள் உங்கள் அளவில் இருப்பதைவிட இன்னும் பெரிதாகிட உதவும். அப்படித்தான் வாழ்க்கை நடக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் நன்றாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
என் வாழ்க்கையில் நடந்தது இது: இளைஞனாக இருந்தபோது கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிகளில் தனியாக பயணம் மேற்கொள்வது எனது வழக்கமாக இருந்தது. அங்கே வருடத்தில் சுமார் நான்கு மாதங்களுக்கு பனிமூட்டமாக இருக்கும். காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று தூரத்தில் பெரும் காட்டுத்தீ எரிவதைப் பார்த்தேன். அருகில் சென்று பார்க்க நினைத்து அதை நோக்கி ஓடத் துவங்கினேன். சுமார் 4-5 கிலோமீட்டர் ஓடி அந்த இடத்தை நெருங்கியபோது, அங்கிருந்த ஒரு சிறு குடிசையின் அருகில் அமர்ந்திருந்த இரண்டு மனிதர்கள் தங்களுக்கு முன் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். காற்றில் பரவியிருந்த கோடிக்கணக்கான பனித்துளிகள் அந்த சிறு நெருப்பை பன்மடங்காக பெருக்கி, ஒரு மலை உயரத்திற்கு காட்டுத்தீ எரிவது போன்ற தோற்றத்தை வானமெங்கும் ஏற்படுத்தியிருந்தது.
உங்கள் வாழ்க்கை இப்படித்தான் ஆகவேண்டும். அருள் பனி போல உங்களை போர்த்தி அரவணைக்கும்போது இப்படித்தான் ஆகும்: நீங்கள் ஒரு சிறு நெருப்பாக இருக்கிறீர்கள், ஆனால் ஒரு பெரும் காட்டுத்தீ போல கொழுந்துவிட்டு எரிவீர்கள். ஆனால், நான் ஒரு சிறு நெருப்புதான் என்பதை ஒருபோதும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.