சத்குரு:

பிரம்மன், விஷ்ணு, மகேஷ்வரன் என்று சொல்லும்போது யாரோ மூன்று பேர் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் - ஒருவர் மேகத்தில் பறக்கிற மாதிரியும், இன்னொருவர் மலைமேல் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், இன்னொருவர் வேறெதோ செய்துகொண்டிருக்கிற மாதிரியும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

நான் மூன்று பேரைப் பற்றி பேசவில்லை, இந்தப் படைப்பின் மூன்று அடிப்படை பரிமாணங்களைப் பற்றி பேசுகிறேன், அதில்லாமல் இந்தப் படைப்பில் எதுவுமே நடக்காது. இந்தக் கதைகளை எல்லாம் நீங்கள் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால், பிரம்மன்தான் படைத்தல் சக்தி. இந்த பிரபஞ்சத்தில் படைப்பு நடக்கிறதா?

பிரம்மன் படைத்தலுக்கானவர், விஷ்ணு இந்தப் படைப்பைக் காப்பவர், சிவன் அழிப்பவர். படைத்தலும், காத்தலும், அழித்தலின் மடியில்தான் வாழ்கிறது.

நிச்சயமாக நடக்கிறது. விஷ்ணு பராமரிப்பு. பராமரிப்பு வேலைகள் நடக்கிறதா? நான் டெல்லியைப் பற்றி பேசவில்லை, இந்தப் படைப்பைப் பற்றி பேசுகிறேன். பராமரிப்பு நடக்கிறதா? எது நடக்கிறதோ இல்லையோ அழித்தல் நிச்சயமாக நடக்கிறது.

உங்கள் உடம்பிலேயே இப்போது கோடிக்கணக்கான செல்கள் இறக்கிறது, கோடிக்கணக்கான புது செல்கள் உருவாகிறது, கோடிக்கணக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது, இல்லையா? இந்த சக்திகளின் விளைவாகத்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். இந்தப் பூமியும் அப்படித்தான், சூரிய மண்டலமும், மொத்தப் படைப்புமே, படைப்பின் இந்த மூன்று அம்சங்களின் வெளிப்பாடுதான் - படைத்தல், காத்தல், அழித்தல்.

நீங்கள் சிவனிடம் கொஞ்சம் ஈர்க்கப்பட்டு, சற்று அழிக்கும் தன்மை கொண்டவராக மாறியிருக்கலாம், ஆனால் மூன்று குணங்களும் ஏதோ ஒரு விகிதத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, இல்லையா? இதுதான் இந்த மொத்த அண்டத்துக்குமான அடிப்படை, பிண்டமும் அதே மூன்று சக்தியால்தான் இயங்குகிறது. பிண்டத்திலும் அதே மூன்று சக்திதான்.

மும்மூர்த்திகள் மற்றும் மூன்று சக்திகள்

அணுவிலும் அதே மூன்று சக்திதான், அண்டத்திலும் அதே மூன்று சக்திதான். ரொம்ப ரொம்ப எளிமையான ஒரு படைப்பு இது, நிச்சயமாக!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெறும் மூன்று சக்திகள், மூன்று அடிப்படை சக்திகள்தான் இவ்வளவு பெரிய ஆட்டத்தை ஆடுகிறது. பெரிய விளையாட்டு, இல்லையா? ரொம்ப பெரிய ஆட்டம், வெறும் மூன்று சக்திகள்தான், மூன்று வைத்துக்கொண்டு ரொம்ப சிறப்பான ஆட்டம் இல்லையா? இந்த மூன்று சக்திகள் மட்டும்தான், நீங்கள் இன்னும் ஆழமாகப் போனால், இது ஒரு கையைப் போல இருக்கிறது, இதுமாதிரி ஒரு கையாக இருக்கிறது.

அதுதான் இதன் சிறப்பு. எல்லா இடத்திலும் திரிசூலத்தைப் பார்த்திருப்பீர்கள், அதுவொரு ஆயுதம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அதை மக்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு ஆயுதம் தேவைப்பட்டால், இதுவொன்றும் அவ்வளவு சிறப்பான ஆயுதமில்லை. ஆமாம்.

சிவன் கையில் ஏன் திரிசூலம்?

யாரையோ கொல்வதற்குத் திரிசூலம் அவ்வளவு சிறந்த ஆயுதம் கிடையாது. சண்டை போடுவதைப் பற்றித் தெரியாதவர்கள்தான், திரிசூலத்தைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போவார்கள். ஆமாம் அல்லது இல்லையா? திரிசூலத்தை வைத்து யாரையாவது இப்படி குத்த முடியுமா, சொல்லுங்கள்?

திரிசூலம் ஆயுதம் கிடையாது, அதுவொரு அடையாளச் சின்னம். சிவன் திரிசூலத்தை வைத்திருப்பது உங்களுடன் சண்டை போடுவதற்காக இல்லை. அவரின் மகன் வேல் வைத்திருக்கிறார், அது போருக்கான ஆயுதம். அவர் போருக்கு மேல் போர் செய்துகொண்டே இருந்தார். கார்த்திகேயன் தொடர்ந்து போர் புரிந்தார்.

சிவன் போர் செய்யவே இல்லை, திரிசூலம் ஒரு அடையாளச் சின்னம். மேலோட்டமாகப் பார்த்தால் இது மூன்றாக இருந்தாலும், ஆழத்தில் எல்லாமே ஒன்றுதான் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார்கள். அதை நீங்கள் ஆயுதம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள், அது ஆயுதம் இல்லை. அப்படியொன்றும் நல்ல ஆயுதம் கிடையாது, சரியா? மற்றவர்களைத் தள்ளிவிட வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களைக் குத்த நினைத்தால், அதுவொன்றும் நல்ல ஆயுதம் கிடையாது, இல்லையா?

இந்த மூன்றும், மேலோட்டமாகப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கும், ஆழமாகப் பார்த்தால் எல்லாமே ஒன்றுதான். ஆனால், இந்த மூன்றும், படைப்பின் எல்லா அம்சங்களிலும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது. புரோட்டானில் இருந்து, நியூட்ரான், எலக்ட்ரான் வரை, பலப்பல விதங்களில் அது வெளிப்படுகிறது, அது எப்பவும் இருந்துகொண்டே இருக்கிறது.

அப்போது, மகாதேவனின் முக்கியத்துவம் என்ன? இந்த மூன்றும் ஒன்றாகச் செயல்படுகிறது, அவர்தான் மகாதேவன், மூன்று தேவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் செயல்பட்டால், அவர் மகாதேவன்.

அதனால்தான் அழிப்பவரை மகாதேவன் என்று சொன்னோம். ஏனென்றால், பிரம்மன் படைத்தலுக்கானவர், விஷ்ணு இந்தப் படைப்பைக் காப்பவர், சிவன் அழிப்பவர். படைத்தலும், காத்தலும், அழித்தலின் மடியில்தான் வாழ்கிறது. படைப்பில் உள்ள வெற்றிடம்தான், மிகவும் விரிவானது, எல்லையற்றது, மேலும் அதன் மடியில்தான் படைத்தல் நிகழ்ந்து மறைகிறது, அப்படித்தானே? நடக்கிறது, முழுதாகச் செயல்பட்டுவிட்டு அழிந்தும் போகிறது - இதெல்லாமே சிவனின் மடியில்தான் நடக்கிறது, ஏனென்றால் அவர் அழித்தலுக்கு உரியவர்.

புரிந்துகொள்ள இயலாத புவியீர்ப்பு விசை

ஷிவா என்றால் எது இல்லையோ, அது - ஷி வா என்றால் - எது இல்லையோ அது என்று அர்த்தம். நாம் அதை வணங்கக் காரணம், அதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. இன்றைக்கு நவீன அறிவியல் மெல்ல இதை நோக்கித்தான் நகர்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன், எலக்ட்ரோ மேக்னெடிக் சக்தி, அணுசக்தி, புவியீர்ப்பு சக்தி, இதெல்லாம் தான் பெரிசு என்று நம்பிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால், இப்போது ஆழமாகப் போகப் போக... நவீன அறிவியலில் புவியீர்ப்பு விசைக்கு போதுமான விளக்கம் இன்றைக்கு வரைக்கும் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா? ஐசக் நியூட்டன், "ஆப்பிள் கீழே விழுகிறது," என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். ஆப்பிள் கீழேதான் விழுகிறது என்று இங்கு இருக்கிற ஒவ்வொரு கிராமத்து பையனுக்கும் தெரியும், இல்லையா?

அவர் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை, அதற்கு கணிதப் பின்னணியும் இல்லை. வெறுமனே, ஆப்பிள் கீழே விழுகிறது என்று மட்டும் சொன்னார், வேறு ஒன்றும் சொல்லவில்லை. அப்போதிலிருந்து அது என்ன என்று கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். மற்ற சக்திகளைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், புவியீர்ப்பு விசை நவீன அறிவியலைக் குழப்பத்தில்தான் வைத்திருக்கிறது. புவியீர்ப்பு விசை ஏன், எப்படி வேலை செய்கிறது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால்தான் இன்றைக்கு அவர்கள் பேசுகிற ஒரு விளக்கம் என்னவென்றால், ஒரு காலத்தில் சூரியனின் ஈர்ப்புவிசைதான் எல்லா கிரகங்களையும் அதன் இடத்தில் வைத்திருக்கிறது என்றும், ஏதோவொன்றின் ஈர்ப்புவிசைதான் எல்லா பால்வெளிகளையும் பிடித்து வைத்திருக்கிறது என்றும் பேசினார்கள்.

இப்போது, ஏதோவொரு டார்க் போர்ஸ், இருண்ட சக்திதான் எல்லா இடத்திலும் நிரம்பி இருக்கிறது என்று சொல்கிறார்கள். விவரிக்க வார்த்தை இல்லாததால்... அதன் தரத்தை அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை, அதனால் அதை இருண்ட சக்தி என்று சொல்கிறார்கள். இந்த இருண்ட சக்திதான் எல்லாவற்றையும் அது அதன் இடத்தில் தக்க வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்த சக்தியின் இயல்பு என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதை டார்க் எனர்ஜி, இருண்ட சக்தி என்று சொல்கிறார்கள். இந்த இருண்ட சக்தி... சிவனை நாம் எப்போதுமே கருப்பானவர் என்று சொல்லி வந்திருக்கிறோம், இல்லையா? அவரை கரிய தோற்றம் கொண்டவர் என்று சொல்லி வந்திருக்கிறோம். அவரின் இரவுதான் மாதத்தின் இருட்டான இராத்திரி.

நவீன விஞ்ஞானிகள் அவர்கள் பாஷையில், சிவன்தான் எல்லாவற்றையும் ஒன்றாகப் பிடித்து வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதைச் சொல்லிவிட்டதால், யாரோ ஒரு ஆள் எங்கோ மலைமேல் உட்கார்ந்துகொண்டு எல்லாவற்றையும் பிடித்து வைத்திருக்கிற மாதிரி நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். அது அப்படி நடக்கவில்லை.

ஷிவா என்பது என்ன?

ஷிவா என்றால், "எது இல்லையோ, அது." "எது இல்லையோ, அது," இருக்கிறதிலேயே உயர்வானதாகப் பார்க்கப்படுகிறது. "எது இல்லையோ, அது," இந்தப் படைப்பிலேயே ரொம்ப பெரிய வெளிப்பாடு அதுதான். இல்லையா? நீங்கள் வானத்தைப் பாருங்கள். வானத்தை நீங்கள் பார்ப்பதுண்டா? பார்க்கிறீர்களா?

நீங்கள் வானத்தைப் பார்த்தால், உங்கள் பார்வை எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், வானம் முழுக்க நட்சத்திரம் நிறைந்திருக்கிறதாகப் பார்ப்பீர்கள். அது உண்மை இல்லை. அங்கு அதிகமாக இருக்கிறது வெறும் இருள்தான், இல்லையா?

நீங்கள் பார்க்கிற பால்வெளிகள் எல்லாமே சின்னத் துகள்தான். அங்கு பரந்து விரிந்து இருப்பது வெறுமைதான், இல்லையா? அதைத்தான் நாம் ‘ஷிவா' என்று சொல்கிறோம், ஆனால் அதில் பல அம்சங்கள் இருக்கிறது. ஏனெனில் நாம் ஆய்ந்து உணரும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள், இது ஒரு எல்லையற்ற பிரபஞ்சம் என்பதை நாம் அறிவோம். சூரிய மண்டலத்துக்கும், பால்வெளி மண்டலத்தில் இருக்கிற மற்றதற்கும் இடையில் எல்லைக்கோடு இருக்கிறதா என்ன? கிடையாது.

ஒரு பால்வெளி மண்டலத்துக்கும் இன்னொன்றுக்கும் இடையில் எல்லைக்கோடு இருக்கிறதா என்ன? அப்படியொன்றுமே இல்லை. இது ஒரு எல்லையற்ற பிரபஞ்சம். எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் நாம் ஆய்ந்து உணரும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அனைவரையும் வணங்குவதன் காரணம்?

அதனால்தான், நான் சிவனைப் பேசுகிறேன். நான் சிவன் என்று சொல்லும்போது, நான் எந்த சிவனைப் பேசுகிறேன் என்று நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். சிவன் என்று சொல்லும்போது எல்லையில்லாத அந்த வெறுமையைச் சொல்வேன். சிவன் என்று சொல்லும்போது ஆதியோகியைச் சொல்வேன். சிவன் என்று சொல்லும்போது, இங்கு வேலை செய்கிற தொழிலாளி வீதியில் நடந்துகொண்டு இருப்பார், அவரின் பெயர் சிவாவாக இருக்கும்.

இதெல்லாவற்றையும் நாம் ஒருசேரச் சொல்வோம். இந்தக் காரணத்தால்தான், நாம் எல்லையற்ற வெறுமையை, ஒன்றுமில்லாத் தன்மையைப் பார்த்தாலும் உயர்வாகப் பார்க்கிறோம், வணங்குகிறோம். ஆதியோகியை பார்த்தாலும் நாம் இதையே செய்கிறோம். தொழிலாளியான சிவா இங்கே நடந்து சென்றாலும், அவர் படிப்பறிவற்றவராக இருக்கலாம், அவர் பலவற்றை அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம், அப்படி இருந்தாலும் அவரையும் நாம் வணங்குவோம்.

ஏனென்றால் நீங்கள் குறிப்பிடுகிற அந்த டார்க் எனர்ஜி, இருண்ட சக்தி, சிவன் இது எல்லாவற்றையும் பிடித்து வைக்காமல் இந்த உடம்பு கூட ஒன்றாக, ஒருமையாக இருக்காது, வெடித்துச் சிதறிவிடும்.

அதனால்தான், உங்களைப் பார்க்கிறபோதும் அதேதான் செய்வேன், வணங்குவேன். இதுதான் ஒரே வழி. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த ஒரு இடத்தில்தான் இந்த வழக்கம் எல்லாமே இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இதெல்லாமே செய்கிறீர்கள், அதனால் அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது. உங்கள் கடவுளை எப்படி வணங்குகிறீர்களோ அப்படியேதான் எல்லாரையும் வணங்குவீர்கள், இல்லையா?

என்னவென்றால்.. இந்த நபருக்குத் தன்னை உருவாக்கிய மூலம் என்ன என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். படைத்தவர் தனக்குள் உயிர்ப்புடன் இருப்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதைக் காண்பது எனது சிறப்புரிமை. அதை நான் பார்த்தால் அது எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் அதைப் பார்த்தால், அவருக்கு அற்புதங்கள் நடக்கும். ஆனால், இப்போது நான் பார்க்க விரும்புகிறேன், அதனால் உங்கள் கடவுளுக்கு என்ன செய்கிறீர்களோ அதையே உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், உங்களுடைய பணியாளருக்கும் செய்யுங்கள், ஒரு பசுவோ, யானையோ, கல்லோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதையும் கைகூப்பி வணங்குங்கள், ஏனென்றால், எந்தவொரு வாய்ப்பையும் நீங்கள் தவறவிட விரும்பவில்லை.

நீங்கள் எங்கு இருந்தாலும் படைப்பின் மூலம், ஒவ்வொரு படைப்பிலும் துடிப்புடன் இருப்பதைக் காண நீங்கள் முயற்சி எடுக்க விரும்புகிறீர்கள். யாராலும் இதை மறுக்க முடியாது, இல்லையா? படைப்பின் மூலம் எதுவோ, அது ஒரு சிறிய கண்ணுக்குத் தெரியாத அணுவிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நவீன அறிவியலாலும் மறுக்க முடியாது, இல்லையா?